Monday, October 28, 2013

மூலநோய் பற்றி

மூலநோய் என்றால் என்ன? மூலநோய்க்கு காரணம் என்ன? அதற்கான சிகிச்சை முறைகள் என்ன?

மூலநோய் என்பது மலக்குடலிலுள்ள ரத்தநாளங்களில் ஏற்படும் வீக்கமாகும். மூலநோய் ஏற்படுவதற்கு ஆசனவாயின் நரம்புகளில் ஏற்படக்கூடிய அழுத்தம், குழந்தை பிறப்பு, நாள்பட்ட மலச்சிக்கல், அதிகப்படியான உடல் பருமன், வயிற்றுப்போக்கு, மிக கனமான பாரத்தை தூக்குதல், நீண்ட நேரம் நிற்கும் அல்லது அமரும் சூழ்நிலை, குடும்ப வரலாறு மற்றும் துரித உணவு போன்றவை காரணங்களாகும். மூலநோயை அறுவை சிகிச்சை, பேண்டிங் போடுதல் மற்றும் ஸ்டாப்ளர் சிகிச்சை போன்ற சிகிச்சைகளால் சரிசெய்யலாம்.

எந்தமாதிரியான உணவு உட்கொண்டால் மூலநோய் தவிர்க்கலாம்?

நார்சத்து மிகுந்த உணவை உட்கொள்வதால் எந்த பிரச்னையுமில்லாமல் எளிதாக மலம் வெளியேறும். துரித உணவு மற்றும் தண்ணீர் சரியாக அருந்தாமலிருக்கும்போது மலம் இறுகி வெளிவருவதற்கு சிரமம் ஏற்படும். எனவே, கடினமாக முயற்சி செய்து மலத்தை வெளியேற்றும்போது மூலம் வெளியே வர நேரிடும்.

மூலநோயின் அறிகுறிகள் யாவை?

ஆசனவாயில் அரிப்பு, அசெளகரியம், ரத்தப்போக்கு ஆகியவை ஆகும். சில சமயங்களில் மலம் சளி போன்று காணப்படும்.

எனது கர்ப்ப காலத்தின்போது பைல்ஸ் பிரச்னையால் மலம் கழிப்பதில் சிக்கல் ஏற்பட்டது. இதனால் அறுவை சிகிச்சை செய்தேன். ஒருமுறை செய்தால் மீண்டும் செய்யவேண்டி வருமா?

ஒருமுறை அறுவை சிகிச்சை செய்து கொண்டால் மீண்டும் செய்யவேண்டிய அவசியமில்லை. பொதுவாக ஆரம்ப நிலையிலுள்ள மூலத்திற்கு அறுவை சிகிச்சை தேவையில்லை. சிறிது அதிகமாகும்போது பேண்டிங் முறையில் சரிசெய்யலாம். மிகவும் அதிகமான நிலையில் அறுவை சிகிச்சை செய்யவேண்டும். மீண்டும் வராமல் தடுக்க சரியான உணவு முறையை கடைபிடிக்க வேண்டும்.

எனக்கு வெளிமூலம் உள்ளது. இதுவரை எந்த சிகிச்சைக்கும் செல்லவில்லை. மலம் கழிப்பதிலும் சிக்கல் இல்லை. நான் கொலொனோஸ்கோபி பரிசோதனை செய்யவேண்டுமா?

வெளிமூலம் என்பது உள்ளிருந்து வெளியே தள்ளப்படுவதாகும். ஆகவே, உள்ளே பெருங்குடல் பகுதியில் ஏதேனும் பிரச்சினை இருக்கக்கூடும். எனவே, கொலொனோஸ்கோபி பரிசோதனை செய்து பார்ப்பது நல்லது.

மூலம் உள்ளவர்களுக்கு கொலொனோஸ்கோபி கருவியால் சிகிச்சை மேற்கொள்ள முடியுமா? ஆமெனில் அதனால் நோயாளிக்கு அப்பகுதியில் காயம் ஏற்படுமா?

மூலம் உள்ளவர்களுக்கு கொலொனோஸ்கோபி பரிசோதனை மூலம் எந்தவித காயமும் ஏற்படாமல் உறுதி செய்யப்பட்டு அறுவை சிகிச்சை செய்யப்படும்.

கொலொனோஸ்கோபி பரிசோதனைக்கு வயது வரம்பு உள்ளதா?

காலொனோஸ்கோபி பரிசோதனைக்கு வயது வரம்பு இல்லை. பெருங்குடல் பகுதியில் பிரச்சினை ஏதேனுமிருந்தால் எந்த வயதினரும் கொலொனோஸ்கோபி பரிசோதனை மேற்கொள்ளலாம்.

No comments:

Post a Comment